விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக கூறப்படுகின்றது.
புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு அண்மித்த நிலைகளிலிருந்த லம்போ மோதல் ஒன்றில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார்.
திருமணமாகாத நிலையில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்திருந்த லம்போ, புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அயலவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே இன்று காலை அவரது சடலம் சந்தேகத்திற்கு இடமான முறையில் மீட்கப்பட்டுள்ளது.
தகவலையடுத்து மீட்கப்பட்ட அவரது சடலம் வல்வெட்டித்துறை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, அங்கு இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.