டென்மார்க்கில் அனைத்துலக தொடர்பகத்தின் கிளை அமைப்பான, மாலதி தமிழ் கலைக்கூடத்தினர் பில்லுண்ட் நகரசபையின் மண்டபத்தை தமிழ் பிள்ளைகளின் நிகழ்வு நடாத்த என பொய்யான காரணத்தை கூறி இலவசமாக பெற்று சைக்கிள் கட்சியினரின் சமஸ்டி கூட்டத்தை நடாத்த முற்பட்டது அம்பலப்பட்டதால், கட்டணம் செலுத்தியே கூட்டத்தை நகரசபையின் மண்டபங்களில் நடாத்தலாம் என நகரசபையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக எமது இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையிலேயே பில்லுண்ட் நகரசபை மேற்கொண்ட விசாரணையின் பின் தமது முடிவை தெரிவித்துள்ளார்கள்.
“வேற்றுநாட்டு அரசியல் செயல்பாடுகளுக்கு இலவசமாக மண்டபங்களை வழங்க முடியாது. டென்மார்க் பேச்சுரிமையை பேணும் நாடு” என குறிப்பிட்ட நகரசபை, “இந்த கூட்டத்தின் ஒழுங்கமைப்பாளர்கள் இலவச மண்டபத்திற்கு பதிலாக கட்டணம் செலுத்தி, வாடைகைக்கு ஒரு மண்டபத்தை பெற்றுக்கொள்ளலாம்“ என தெரிவித்துள்ளார்கள்.
அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் அமைப்புக்களுக்கு நகரசபையின் உதவிகளோ, சலுகைகளோ வழங்கப்படமாட்டாது எனவும் தெரியவந்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து வந்து டென்மார்க் சட்டங்களை மதிக்காது நகரசபையை ஏமாற்ற முற்பட்ட சைக்கிள் கட்சியால் பில்லுண்ட் நகரசபையில் வாழும் தமிழ் மக்களும் அவமானப்பட்டுள்ளார்கள்.
சமஸ்டி என கூறி ஒற்றை ஆட்சிக்கு சமனான தீர்வு வரைவுடன் ஜரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்களை சைக்கிள் கட்சியினர் சந்தித்து வருகின்றனர்.
சைக்கிள் கட்சியினரின் தீர்வு வரைவில் அலகு 1.4 இல் கூறப்பட்டிருக்கும் ஒன்றுபட்ட, பிரிக்க முடியாத இலங்கை அரசு என கூறியிருப்பது ஒற்றை ஆட்சிக்கு சமனானது.

புலம் பெயர் தமிழ் மக்களிடம் இப்பொழுது சமஸ்டி ஆனால் தமிழீழம் தான் கனவு என அரசியல் பாடம் புகுத்த முனையும் சைக்கிள் கட்சியினர் பிரிவினைக்கு சார்பாக சமஸ்டி அரசு முனைந்தால் மத்திய அரசு சமஸ்டியை கலைக்கலாம் என தமது தீர்வு வரைவில் அலகு 21.1 இல் கூறியிருக்கின்றனர். பிறகு எப்படி தமிழீழ கனவை நிறைவேற்றுவது.

6ம் திருத்தச் சட்டத்திற்கு மாறாக கதைத்தால் தமது சொத்துக்களை சிறிலங்கா அரசு முடக்கும் என்ற காரணத்தால் தமது சொத்துக்களை பாதுகாக்கவே இவர்கள் சமஸ்டி உடன் வந்து புலம்பெயர் தமிழ் மக்களை ஏமாற்ற முனைகின்றனர்.
இவர்களின் கூட்டங்களுக்கு செல்லும் எமது மக்கள் சைக்கிள் கட்சியினரின் தீர்வு வரைவை ஆராயந்து கேள்விகளை கேட்பது இவர்களது கபட நாடகத்தை வெளிக்காட்டும்.
2019 ம் ஆண்டு க்கு வழங்கிய செவ்வியில் கயேந்திரகுமார் தமிழீழத்தை கைவிடுமாறு புலம்பெயர் தமிழ் மக்களை கேட்க முடியாது எனவும், அப்படி கேட்கும் உரிமையும் இல்லை எனவும் கூறியிருந்தார். ஆனால் இப்பொழுது தமது சமஸ்டி தீர்வுக்கு புலம்பெயர் தமிழ் மக்களிடமும் அவர்கள் வாழும் நாட்டு தலைவர்கள் இடமும் ஆதரவு கேட்டுவருகின்றார்கள்.
தமிழீழ தேசிய தலைவர் 2002 ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தமிழீழத்திற்கு மாற்றான தீர்வுகளை பரிசீலனை செய்யமுடியும் என தெரிவித்ததுடன் பிரிந்து சென்று தமிழீழ தனியரசை அமைக்கும் உரிமையும் அந்த தீர்வில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.